கடலூர் அருகே பழிக்கு பழி வாங்க கத்தியுடன் காரில் சுற்றிய 2 வாலிபர்கள் கைது
- சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக கார் முழுவதும் சோதனை செய்தபோது கத்தி இருந்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் மகிபால் மற்றும் போலீசார் கடலூர் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அவ்வழியாக வந்த காரினை நிறுத்தி சோதனை செய்த போது காரில் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, திடீரென்று 2 வாலிபர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட்டினார்கள்.
சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக கார் முழுவதும் சோதனை செய்தபோது கத்தி இருந்தது தெரிய வந்தது. உடனடியாக 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர். அவர்களை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
புதுவை மாநிலம் கரிக்கலாம்பாக்கம் சுதாகர் (வயது 21), புதுக்கடை சிங்கிரிகுடி ஹரி கிருஷ்ணன் (20) என்பது தெரிய வந்தது. காரின் பின்பக்கம் மற்றொரு கத்தி மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காரில் இருந்து தப்பிஓடியவர்கள் ஜோசப் (28), அருண்பாண்டியன் (26) என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
புதுவை மாநிலத்தில் தாடி அய்யனார் மற்றும் ஜோசப் என்ற 2 ரவுடி கும்பல் இருந்து வருகின்றன. இதில் ஜோசப் அணியை சேர்ந்த அன்பரசனை கடலூர் அடுத்த சிங்கிரிகுடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாடி அய்யனார் தரப்பினர் கொலை செய்து புதைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அன்பரசனை கொலை செய்த தாடி அய்யனாரை கொலை செய்வதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன் காரில் கத்தியுடன் சுற்றி வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தப்பி சென்ற ஜோசப் மற்றும் அருண்பாண்டியன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.