உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே கள்ளக்காதலி-குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதால் தி.மு.க. பிரமுகர் தற்கொலை

Published On 2022-12-20 11:02 GMT   |   Update On 2022-12-20 11:02 GMT
  • திவாகர் தற்கொலை செய்தது பற்றி அறிந்ததும் கள்ளக்காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • அவர்கள் சிக்கினால் தான் திவாகர் மிரட்டப்பட்டாரா? அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும்.

பொன்னேரி:

பொன்னேரி, ஜீவா தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது32). நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இவரது மனைவி ரஞ்சனி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

திவாகர், பொன்னேரியை அடுத்த வேம்பாக்கத்தில் வீட்டு உபயோக பொருட்களை சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்தார்.

கடையில் வேலை பார்ப்பதால் அந்த இளம்பெண்ணுடன் திவாகருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவு வேம்பாக்கத்தில் உள்ள கடையில் திவாகர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் தகராறில் திவாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே கடையில் வேலைபார்த்த இளம்பெண்ணுடன் திவாகருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், இதை அறிந்த கள்ளக்காதலியின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதால் திவாகர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது மனைவி ரஞ்சனி போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திவாகரின் மனைவி ரஞ்சனி பொன்னேரி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் திவாகர் வேம்பாக்கத்தில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பழுதுபார்க்கும் கடை வைத்து உள்ளார். இங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலைபார்த்த இளம்பெண்ணுடன் எனது கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை நான் பலமுறை கண்டித்தேன்.

இதனால் அந்த பெண்ணுடன் உள்ள தொடர்பை கணவர் விட்டு விடும் நிலை இருந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணின் தாய், அக்காள் மற்றும் அண்ணன் ஆகியோர் எனது கணவரை ஏமாற்றி விட்டதாக மிரட்டினர்.

மேலும் ரூ.10 லட்சம் கேட்டனர். கணவரிடம் என்னை விவாகரத்து செய்யும்படியும் கட்டாயப்படுத்தினர். இதனால் கணவர் மிகவும் மனவேதனையில் இருந்தார். அந்த இளம்பெண் ஏற்கனவே வேறு வாலிபரை காதலித்து உள்ளார்.

அந்த வாலிபரும் எனது கணவரை மிரட்டி இருக்கிறார். வீட்டை விற்று கணவர் பணம் வைத்து இருந்தார். இதனை அறிந்து அவர்கள் பணத்தை பறிக்க தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இந்த நிலையில் கணவர் திவாகர் தற்கொலை செய்துள்ளார்.

இதற்கு காரணமான இளம்பெண் மற்றும் அவரது அக்காள், அண்ணன் மற்றும் முன்னாள் காதலன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதற்கிடையே திவாகர் தற்கொலை செய்தது பற்றி அறிந்ததும் அந்த கள்ளக்காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அவர்கள் சிக்கினால் தான் திவாகர் மிரட்டப்பட்டாரா? அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும். தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News