உள்ளூர் செய்திகள் (District)

ஏழை மக்களுக்காக தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை- எடப்பாடி பழனிசாமி

Published On 2022-11-16 07:12 GMT   |   Update On 2022-11-16 07:12 GMT
  • தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் ஏழை மக்களுக்காக செயல்படும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நான் முதல்வராக இருக்கும் வரை ஏழை மக்களுக்காக பணி செய்தோம்.

சிதம்பரம்:

வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக சிதம்பரம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் 30 செ.மீ.மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியை பார்வையிடுவதற்காக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் வந்தார்.

சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் அவர் வெள்ள சேதங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் ஏழை மக்களுக்காக செயல்படும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நான் முதல்வராக இருக்கும் வரை ஏழை மக்களுக்காக பணி செய்தோம். பருவமழை காலங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கனமழைக்கு பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வெள்ளபாதிப்புகளை தடுத்தது அ.தி.மு.க. அரசு.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஆதனூர், குமாரமங்கலம் இடையே ரூ.500 கோடி செலவில் கதவணை அமைத்து வெள்ள பாதிப்பை தடுத்தது அ.தி.மு.க. அரசு. ஒரே ஆண்டில் 2 முறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்கடனை முறையாக தள்ளுபடி செய்தது அ.தி.மு.க. அரசு.

எம்.ஜி.ஆர். காலம் தொட்டு ஏழை மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருவது அ.தி.மு.க. அரசு. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை காழ்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசு கைவிட்டது. குறிப்பாக அம்மா கிளினிக் மூடப்பட்டது. ஏழை மக்களுக்காக தி.மு.க. அரசு எதையும் செய்யவில்லை.

மக்கள் விரோத அரசை அ.தி.மு.கவினர் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் பாண்டியன், அருண்மொழிதேவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், செல்வி ராமஜெயம், அருள் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News