உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவரை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி

Published On 2023-05-31 09:15 GMT   |   Update On 2023-05-31 09:15 GMT
  • சுப்பிரமணி கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து பத்மாவை கொடுமைப்படுத்தி வந்தார்.
  • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவை கைது செய்தனர்.

ஈரோடு:

ஈரோடு கனிராவுத்தர்குளம், ஜாமியா மஸ்ஜித் பின்புற வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (52). இவரது மனைவி பத்மா (51). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

மகனுக்கு திருமணம் ஆகி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சுப்பிரமணி தறி பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சுப்பிரமணிக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த பத்மா கள்ளத்தொடர்பை கைவிடுமாறு பலமுறை கணவரை கண்டித்துள்ளார். எனினும் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் சுப்பிரமணி கள்ளதொடர்பை தொடர்ந்து உள்ளார்.

மேலும் இது தொடர்பாக மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் சுப்பிரமணி கள்ளத்தொடர்பை கைவிட மறுத்து பத்மாவை கொடுமைப்படுத்தி வந்தார்.

நேற்று இரவும் சுப்பிரமணி-பத்மா இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இரவு முழுவதும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் தூங்க சென்று விட்டனர். எனினும் ஆத்திரத்தில் இருந்த பத்மா இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென எழுந்தார். பின்னர் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து வந்து சுப்பிரமணியை சரமாரியாக தாக்கினார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் பத்மா வீட்டின் கதவை பூட்டிவிட்டு நேராக வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வீரப்பன்சத்திரம் போலீசார் பத்மாவை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு கதவை திறந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவை கைது செய்தனர்.

Tags:    

Similar News