உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை, அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை வெளியிட்டால் எதிர்கொள்ள தயார்- ஜெயக்குமார்

Published On 2023-04-15 10:19 GMT   |   Update On 2023-04-15 10:19 GMT
  • அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
  • அ.தி.மு.க. வினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பிப்பது மிரட்டல் விடுப்பது எல்லாம் எங்களிடம் பலிக்காது.

திருவொற்றியூர்:

திருவொற்றியூரில் 18 இடங்களில் அ.தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி, மோர் போன்றவற்றை வழங்கினார்.

பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊழலிலே திளைத்த கட்சி தி.மு.க. என்று உலகத்திற்கே தெரியும். தி.மு.க.விற்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க.

1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தி.மு.க.வினர் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இந்த 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயை 100 ரூபாயாக அடுக்கினால் நிலவிற்கு கால்வாசி தூரம் சென்று விடலாம். அண்ணாமலை தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை வெளியிட்டது ஒரு நல்ல விஷயம்.

ஆனால் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அந்த சொத்துகள் அனைத்தையும் முடக்கி அரசுடமையாக்க அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.தி.மு.க.வின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவேன் என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தாலும் எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.

அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும். அதன் பின்னர் எங்களுடைய செயல்பாடுகளை நீங்கள் பார்ப்பீர்கள்.

அ.தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் அ.தி.மு.க. வினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பிப்பது மிரட்டல் விடுப்பது எல்லாம் எங்களிடம் பலிக்காது.

விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் தி.மு.க.வை மிஞ்ச யாரும் இல்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு தமிழ்நாடே சந்தி சிரிக்கும் அளவிற்கு உள்ளது.

ஒவ்வொரு போலீசாரும் இன்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கின்றனர். காவல்துறையை சேர்ந்த ஒருவர் என் வேலை போனாலும் பரவாயில்லை என் குழந்தையின் கால் போய் விட்டது, யார் மேல் ந வடிக்கை எடுப்பது என்று போராடுகிறார்.

இந்த 2 வருடங்களில் போலீசாருக்கு எதிராக பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. சட்டத்தை கையில் எடுத்து சட்ட விரோத செயல்களை செய்கிறார்கள். காவல்துறை நிலைமை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News