ராமாபுரத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
- இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
- ராமாபுரத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
ஆவடி பகுதியை சேர்ந்தவர் நலன்ராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரான்சி மோனிகா.
கடந்த 2-ந் தேதி காலை கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ராமாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
மவுண்ட் பூந்தமல்லி சாலையில் வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மோனிகா கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ராமாபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு செல்போன் பறிப்பில் ஈடுபட்டது முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (19) என்று தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.