உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க திருமாவளவன் ஆலோசனை

Published On 2023-05-10 03:41 GMT   |   Update On 2023-05-10 03:41 GMT
  • செயலாளர்கள் பொறுப்பு வழங்க உள்ள மாவட்டங்களில் முதல்கட்டமாக 17 மாவட்டங்களின் பெயர்களையும் திருமாவளவன் அறிவித்தார்.
  • கட்சியின் பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி விரைவில் மறுசீரமைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையொட்டி, கட்சி பொறுப்புகளுக்கு விருப்பமனுக்கள் பெறப்பட்டன.

மாவட்டச்செயலாளர் பொறுப்பில் 25 சதவீதம் இளைஞர்கள், தலா 10 சதவீதம் பெண்கள், பட்டியலினத்தைச் சாராதவர்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி செயலாளர்கள் பொறுப்பு வழங்க உள்ள மாவட்டங்களில் முதல்கட்டமாக 17 மாவட்டங்களின் பெயர்களையும் திருமாவளவன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து மீதமுள்ள மாவட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த கட்சியின் உயர்நிலைகுழு கூட்டம், சென்னை, அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் தலைமையில் நேற்று நடந்தது.

கட்சியின் பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் புதிய பொறுப்புகளுக்கு யார்-யாரை தேர்வு செய்வது என்று ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News