உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலை கைவிடாததால் தொழிலாளி வெட்டிக்கொலை: ஒருவர் கைது

Published On 2023-04-04 07:48 GMT   |   Update On 2023-04-04 07:48 GMT
  • கொலை தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
  • விசாரணையில், கொலையுண்ட சுந்தர பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகன் சுந்தர பாண்டி(வயது36).

இவர் சிவகாசியில் உள்ள சாம்பிராணி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய சுந்தர பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிசிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்தப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கொலை தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கொலையுண்ட சுந்தர பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

இதனை கைவிடுமாறு சுந்தர பாண்டியை, சந்திரன் பலமுறை கண்டித்துள்ளார். இந்தநிலையில் சந்திரனின் ஆதரவாளர்கள் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல், கண்ணன், சுருட்டை குமார், வீரபுத்திரன், குட்டை ஆனந்த் ஆகிய 5 பேர் சந்திரனுக்கு ஆதரவாக நேற்று மாலை சுந்தர பாண்டியை சந்தித்து கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த 5 பேரும் சுந்தரபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய வீரபுத்திரன் என்பவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்துள்ளனர். சாமுவேல் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News