அன்னூர் அருகே இடிந்து விழும் நிலையில் தெலுங்குபாளையம் பஸ் நிழற்குடை
- 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிழற்குடை அமைக்கப்பட்டது.
- புதிய நிழற்குடை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னூர்,
கோவையில் இருந்து சத்தி செல்லும் சாலையில் உள்ளது கரியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தெலுங்கு பாளையம் பிரிவு பகுதி.
இந்த கிராம மக்களின் வசதிக்காக கோவை-சத்தி சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதனை அந்த ஊர் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த பஸ் நிழற்குடை முழுவதும் சேதம் அடைந்து மக்கள் பயன்பாடின்றி கிடக்கிறது. பஸ் நிழற்குடையில் இருக்கும் காங்கிரீட் அனைத்தும் வெளியில் தெரிந்தபடியும் விரிசலுடன் உள்ளது.
அத்துடன் பயணிகள் அமரும் இருக்கையும் சேதம் அடைந்துள்ளது. மேலும் நிழற்குடையின் இரு புறங்களிலும் உள்ள ஜன்னல்கள் முற்றிலும் உடைந்து கீழே விழும் நிலை காணப்படுகிறது.
இதனால் தற்பொழுது இந்த பஸ் நிழற்குடையை பொதுமக்கள் பயன்படுத்தாமல் சற்று தொலைவில் நின்று வருகின்றனர்.
பஸ் நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெரியவர்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் வெயில், மழை காலங்களில் மிகுந்த சிரம் அடைந்து வருகிறார்கள்.
எனவே இந்த பஸ் நிழற்குடையை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.