பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- கடந்த 2017-18-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்கு சில மாத காலம் மட்டும் பயன்பாட்டில் இருந்த நிலையில் கஜா புயலின் போது சேதமடைந்தது.
- இரவு நேரங்களில் பெண்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்க அச்சப்படும் நிலை உள்ளது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடைவீதி கிழக்கு கடற்கரை சாலையில் மூன்று சாலைகள் சந்திக்கும் முக்கிய இடத்தில் பஸ் நிலையம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.
இது கடந்த கஜா புயலின் போது சேதமடைந்தது. தற்போது இதில் உள்ள ஆறு மின்விளக்குகளில் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ஒரு மின்விளக்கு மட்டுமே ஒளிர்கிறது.
இது குறித்து சேதுபாவாசத்திரம் சமூக ஆர்வலர் பாவா கூறுகையில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பரசுராமன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த 2017-18-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்கு சில மாத காலம் மட்டும் பயன்பாட்டில் இருந்த நிலையில் கஜா புயலின் போது சேதமடைந்தது.
கிழக்கு கடற்கரை முக்கிய சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்கு சேதமடைந்ததால் அப்பகுதியே இருளாக காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் பெண்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்க அச்சப்படும் நிலை உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றிற்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த உயர்கோபுர மின் விளக்கை சீரமைத்து அனைத்து விளக்குகளும் ஒளிரும் வகையில் புதிதாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.