கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதிய கட்டிடத்தில் கலெக்டர் குத்துவிளக்கேற்றினார்
- கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதிய கட்டடம் முதல-அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- கால்நடைகளில் நோய் மாதிரி பொருட்களை சேகரித்து தடுப்பூசி அல்லது சிகிச்சை நடத்தப்பட்டன.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதிய கட்டடம் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இக்கால்நடை நோய் புலனாய்வு பிரிவகத்தின் மூலம் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து நகர்புற, கிராமப்புற பகுதிகளில் பராமரிக்கப்பட்டு, வளர்க்கப்பட்டுவரும் அனைத்துவகை கால்நடைகளும் எவ்வித நோய் தொற்று ஏதும் வராமலும், பரவாமலும் இருக்க அவ்வபோது கால்நடைகளில் நோய் மாதிரி பொருட்களை சேகரித்து ஆய்விடப்பட்டு ஆய்வின் முடிவின்படி தடுப்பூசி அல்லது சிகிச்சை முகாம்கள் நடத்தப்படும்.
இக்கட்டடமானது, 3 ஆயிரத்து 761 சதுர அடி பரப்பளவில்; அலுவலக அறை, ஆய்வகம், இருப்பு அறை, உதவி இயக்குநர் அறை, கால்நடை மருத்துவர் அறை, கழிவறைகள் ஆகிய வசதிகளுடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இப்பிரிவகத்தினை மாவட்ட கலெக்டர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர். தொடர்ந்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் கலைசெல்வி செல்வகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் தளபதி உதவி இயக்குநர்கள் ஈஸ்வரன், சபாபதி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவக உதவி இயக்குநர் சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.