தூத்துக்குடியில் வீடு புகுந்து திருடியவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்
- சிவலிங்கம் தனது மனைவி பால சரஸ்வதியுடன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர்,
- பின்னர் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது,அவர்களின் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சின்னகண்ணு புரத்தைச் சேர்ந்தவர் சிவ லிங்கம் (வயது 39) மெக்கானிக்.
இவர் தனது மனைவி பால சரஸ்வதியுடன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர்,
அவர்கள் வீட்டின் அருகே வரும்போது எதிரே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு வாலிபர் சென்றதைப் பார்த்தனர். மேலும் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது,அவர்களின் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது,
இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த தங்க கம்மல், மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 3 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது,
இதனால் சிவலிங்கம் வீட்டுக்கு வரும்போது எதிரே வரும் வழியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற வாலிபர் தான் வீடு புகுந்து திருடியிருக்க கூடும் என சந்தேகமடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கூறி விரட்டிச் சென்று அந்த வாலிபரை பிடித்து சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரணை நடத்திய போது அவர் தூத்துக்குடி கே.வி.கே.சாமிநகரை சேர்ந்த அழகுராஜா( 29) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.