உள்ளூர் செய்திகள் (District)

வாலிபர் வெட்டி கொலை

Published On 2023-03-23 09:55 GMT   |   Update On 2023-03-23 09:55 GMT
  • இரவு, உமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரும், காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தனர்.
  • வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனை வெட்டினர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காரப்பள்ளியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் மோகன் (27), கூலித்தொழிலாளி.

இந்த நிலையில் அவரும், சோமநாதபுரத்தை சேர்ந்த உமேஷ் (24) மற்றும் கார்த்திக் (25) ஆகியோர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஏரி அருகே பணம் வைத்து சூதாடினர். இதில் உமேஷ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் ரூ.20,000- ஜெயித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இரவு , உமேஷ், கார்த்திக் ஆகிய 2 பேரும், காரப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தனர்.

அப்போது, நண்பர் மஞ்சு என்பவருடன் அங்கிருந்த மோகன், உமேஷ் மற்றும் கார்த்திக்கிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்தார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மோகனை தாக்கி அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

மோகனின் நண்பர் மஞ்சுவும் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த வெட்டுபட்ட மோகனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனினடையே, உமேசும், கார்த்திக்கும் நேற்று இரவு ஓசூர் டவுன் போலீசில் சரணடைந்து, மோகனை வெட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News