உள்ளூர் செய்திகள் (District)

செங்காந்தள் கிழங்கை தின்றவர் சாவு

Published On 2022-11-13 09:08 GMT   |   Update On 2022-11-13 09:08 GMT
  • சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை பார்த்து விபரீதம்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 26). அவரது நண்பர் நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த ரத்தினம் (வயது 45). இவர்கள் இருவரும் விண்ணமங்கலம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் செங்காந்தள் பூச்செடி கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை பார்த்து இருவரும் செங்காந்தள் செடியை பிடுங்கி கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளனர் . இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே இருவருக்கும் வாந்தி - மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர்.

அதன் பின் மேல் சிகிச்சைக்காக லோகநாதனை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் . ரத்தினம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Tags:    

Similar News