விநாயகர் சிலை செல்லும் பாதைகளில் ஐ.ஜி. ஆய்வு
- நாளை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது
- போலீஸ் நிலைய பணிகள் குறித்து சோதனை செய்தார்
வாணியம்பாடி:
வாணியம்பாடி சரக போலீசிக்கு உட்பட்ட, வாணியம்பாடி நகரம், ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, திம்மாம் பேட்டை, அம்பலூர், உதயேந்திரம் உள்ளிட்ட பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
இந்த சிலைகள் அனைத்தும் நாளை (வெள்ளிகிழமை) கரைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென வாணியம்பாடிக்கு வந்த வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி, வாணியம்பாடியில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும் இடங்களையும், விநாயகர் ஊர்வலம் கொண்டு செல்லப்படும் சாலைகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம் பணிகள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.