கிரில் ஒர்க்ஷாப் தொழிலுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்
- ஜி.எஸ்.டி.வரி வசூலிக்க முடியாமல் கூலிக்கு மட்டுமே வேலை செய்து வருகிறோம்.
- கிரில் ஓர்க்ஷாப் தொழிலுக்கும் குறைந்தபட்சம் 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்.
பல்லடம்:
பல்லடத்தில் திருப்பூர் மாவட்ட கிரில் உரிமையாளர் நலச்சங்க செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் திருமுகம் மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
செயலாளர் கருணாமூர்த்தி, பொருளாளர் பாலமுருகன், துணைத்தலைவர்கள் சக்திவேல், சங்கர நாராயணன், கொள்கை பரப்பு செயலாளர் செம்பியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் பொறுப்பாளர் வெங்கடேஷ் வரவேற்றார். இந்த கூட்டத்தில் சங்க நிறுவன தலைவர் திருமலை ரவி, அவிநாசி நிவின் விஷ்ணு, கோவை யுவராஜ், கவுரவ தலைவர்கள் ஜெயம் மூர்த்தி, ராசி கோபால், ஆறுமுகம், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறிக் கூடங்கள் போல் கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்களும் ஜி.எஸ்.டி.வரி வசூலிக்க முடியாமல் கூலிக்கு மட்டுமே வேலை செய்து வருகிறோம். எனவே விசைத்தறி தொழில் கூடங்களுக்கு 700 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவது போல் கிரில் ஓர்க்ஷாப் தொழிலுக்கும் குறைந்தபட்சம் 500 யூனிட் இலவசமாகவும் அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் வழங்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் கிரில் ஒர்க்ஷாப் தொழிலுக்கென்றே தனித்தொழில் பேட்டைகள் அமைத்து அதனை இலவசமாக அல்லது எளிய தவணை முறையிலோ கொடுக்க வேண்டும். எங்களது தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர்களும், தொழிலாளர்களும் விபத்தில் சிக்கி உடல் ஊனமோ அல்லது மரணமோ எய்துவதால் அவர்களின் குடும்பம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
எனவே கிரில் ஒர்க்ஷாப் தொழிலுக்கென்று தனி நலவாரியம் அமைத்துக் கொடுத்தால் லட்சத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள்.இந்த தொழிலுக்கு அரசின் மூலம் மானியத்துடன் சொத்து பிணை இல்லாமல் குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் வங்கி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.