பருவமழை தாமதத்தால் விவசாயிகள் கவலை
- ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்காமல் வறட்சியான காற்றும், அதிக வெப்பமும் நிலவியது.
- தென்னை மரங்களுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குடிமங்கலம்:
குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள இக்குளங்களுக்கு பருவமழை காலங்களில் நீர்வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்ற ப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு கோடை கால மழை பெய்யவில்லை.
ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்காமல் வறட்சியான காற்றும், அதிக வெப்பமும் நிலவியது.இதனால் குளங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைய துவங்கியது. தற்போது பொன்னேரி, கோட்டமங்கலம், குடிமங்கலம் உள்ளிட்ட பெரும்பாலான குளங்கள், தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.கடந்த சில நாட்களாக சாரலாக பெய்த தென்மேற்கு பருவமழையும் இடைவெளி விட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
குடிமங்கலம் வட்டாரத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு, கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் வறட்சி துவங்கியுள்ளது. கிணறு மற்றும் போர்வெல்களில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. கோடை கால மழையை எதிர்பார்த்து விதைப்பு செய்யப்பட்ட மானாவாரி பயிர்கள் கருகி வருகிறது.
தென்னை மரங்களுக்கும் போதிய தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பருவமழை தீவிரமாக பெய்யாவிட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். ஆடிப்பட்ட விதைப்புக்கு முன் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.