மானியம் கிடைக்காததால்வீடு கட்ட முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்
- பயனாளிகள் குறித்த மறு கணக்கெடுப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.
- அரசு மானிய திட்டத்துக்காக பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.
குடிமங்கலம்:
மத்திய, மாநில அரசு சார்பில் கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் சொந்த வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படும். மானியம் 2.76 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்துக்காக கடந்த 2010ல் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் பயனாளிகள் குறித்த மறு கணக்கெடுப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் கணக்கெடுப்பு விபரங்கள் சில மாதங்களுக்கு முன் 'செல்போன் செயலி'யில் பதிவு செய்யப்பட்டது.இப்பணிகள் நிறைவு பெற்றதும் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டு வீடு கட்டும் பணிகளை துவக்கலாம் என ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். கடந்த சுதந்திர தினத்தன்று ஊராட்சிகளில் நடந்த கிராமசபையில் பயனாளிகள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பட்டியல் வெளியாகவில்லை.
இத்திட்டத்துக்காக விண்ணப்பித்த மக்கள் கூறியதாவது:-
அரசு மானிய திட்டத்துக்காக இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கிறோம். கட்டுமான பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வீடு கட்டுவதற்கான செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது.அரசு திட்டத்துக்காக விண்ணப்பித்துள்ளதால் கட்டுமான பணிகளையும் துவக்காமல் காத்திருக்கிறோம். கலைஞர் வீட்டு வசதி திட்ட வழிமுறைகள் குறித்து தெளிவாக ஒன்றிய அதிகாரிகள் விளக்கமளித்து உடனடியாக பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும். மானியம் ஒதுக்கீடு செய்தால் கட்டுமான பணிகளை துவக்க உதவியாக இருக்கும் என்றனர்.