உள்ளூர் செய்திகள்

உயர் கல்வியில் தி.மு.க.ஆட்சி பொற்காலம்

Published On 2022-06-26 09:14 GMT   |   Update On 2022-06-26 09:14 GMT
  • உயர் கல்வியில் தி.மு.க.ஆட்சி பொற்காலம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
  • சமத்துவ கல்லூரியாக திகழ்கிறது

திருச்சி:

ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக கலந்து கொண்டு குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக் கட்டிடத் திற்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது

ஐந்தாறு நாட்களாக சிறிது காய்ச்சல் இருந்தால் மருத்துவர்கள் அறிவுரையின் படி வெளியில் வரமுடியாத நிலையில் இருக்கிறேன். அதனால் திருச்சியில் ஜமால் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாததால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஜமால் முகமது கல்லூரி திருச்சியின் அடையாளம் ஆகும்.

தீரர்களின் கோட்டம் திருச்சி அதில் தலைசிறந்த கல்வி கோட்ட மாக ஜமால் கல்லூரி இருக்கிறது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனமாக இருந்தாலும் அனைத்து தரப்பினரும் கல்வி பயிலக் கூடிய சமத்துவ கல்லூரியாக ஜமால் முகமது கல்லூரி திகழ்கிறது.

தந்தை பெரியாரோடு தொடர்புடைய ஜமால் இந்த கல்லூரிக்கான இடத்தை வழங்கினார். ஏழைகளுக்கு உயர் கல்வி கொடுப்பதற்காக தான் ஜமால் முஹம்மது கல்லூரி தொடங்கப்பட்டது. அதற்காக நான் அவர்களை பாராட்டுகிறேன். இந்தியாவில் உள்ள நூறு கல்லூரிகளில் ஜமால் முகமது கல்லூரி ஒன்றாக இருக்கிறது.

இந்த கல்லூரி மாணவர்கள் இயல், இசை நாடகம், தேசிய மாணவர் படை ,நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவை சங்கம் போன்றவற்றில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்த கல்லூரி மாணவி பரதநாட்டியத்தில் உலக சாதனை படைத்துள்ளார். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கடந்த 16 வருடமாக கல்லூரியின் தேசிய மாணவர்படை அணிவகுப்பில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்கள்.

மாணவர்களின் தனித்திறமைகளை வளர்ப்பதிலும் அதிக ஈடுபாட்டுடன் இந்த கல்லூரி விளங்குகிறது.

என் பிறந்த நாளான மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் என் கனவு திட்டமாகும். தமிழக மாணவர்கள் கல்வியில், அறிவாற்றலில், பன்முகத்திறமை முதன்மையாக திகழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி காலம் உயர்கல்வியில் ஆராய்ச்சியில் பொற்காலமாக இருக்கவேண்டும் என்ற இலக்கோடு தமிழக அரசு செயல்படுகிறது.

இந்த கல்லூரியில் படித்த மாணவர்கள் உலகில் பல்வேறு நாடுகளில் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

முன்னாள் மாணவர்கள் படிக்க முடியாத மாணவர்களுக்கு உதவி செய்வது பாராட்டுகுரியது. விரைவில் உங்கள் கல்லூரிக்கு கட்டாயமாக வருவேன் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News