- புனித அமல அன்னை ஆலய பெருவிழா நடைபெற்றது
- தேர் பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் அடுத்துள்ள செம்பட்டு புனித அமல அன்னை ஆலய பெருவிழா மிக சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் நடைபெற்றது. முன்னதாக கடந்த 3-ந்தேதி அன்னையின் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து விழாவையொட்டி அமல அன்னையின் நவநாள் திருப்பலி மற்றும் குணமளிக்கும் ஜெப வழிபாடு, நற்கருணை ஆராதனை ஆகியவை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கு இறைமக்கள் அனைவரும் பக்தியோடு கலந்துகொண்ட அன்னையின் வழியாக இறைவனுக்கு நன்றி சொல்லி அவர்களின் குடும்பம் மற்றும் அனைவருக்காகவும் ஜெபித்தனர்.
7-ந்தேதி அன்னையின் அலங்கார தேர் பவனியும், தொடர்ந்து 8-ந்தேதி அன்னையின் பெருவிழா திருப்பலியும் நடைபெற்றது. கடந்த 16 ஆண்டுகாளாக இந்த பங்கு பெருவிழாவை, மத நல்லிணக்க விழாவாகவும், மதங்கள் கடந்து, மனித நேயம் காப்போம் என்ற உயரிய, உன்னதமான சிந்தனையுடன் ஒற்றுமையை வலியுறுத்தியும் கொண்டாடி வருகிறார்கள்.
மத நல்லிணக்க விழா ஏற்பாடுகளை புனித அமல அன்னை ஆலய பங்கு இளைஞர், இளம்பெண்கள், பங்கு பேரவை உறுப்பினர்கள், கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம், அன்பியங்கள், பக்த சபை மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் செய்திருந்தனர். ஆவூர் பங்கு பணியாளர் சூசைராஜ் அன்னையின் பெருவிழா திருப்பலி நிறைவேற்றி ஜெபித்தார்.
தமிழக புனித நார்பர்ட் துறவற சபை அதிபர் மரிய சூசை மற்றும் பல அருள் பணியாளர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலி நடத்தினர். பங்கு பணியாளர் ஆரோக்கிய செல்வன் மற்றும் உதவி பங்கு பணியாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
நல்லிணக்க விழாவில் திருச்சி மாநகராட்சி 65-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகாவதி, கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் மற்றும் முன்னாள் மறைமாவட்ட தலைவர் செல்வம், கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் மற்றும் மறைமாவட்ட தலைவர் சற்குணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.