- மூதாட்டியிடம் செயின் பறித்துள்ளனர்
- மிட்டாய் கடை ஒன்று நடத்தி வருகிறார்.
திருச்சி:
திருச்சி புலிவலம் வேங்கை மண்டலம் அம்பலக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி சீதா (வயது 76). இந்த மூதாட்டி மூவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகாமையில் மிட்டாய் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஒரு வாலிபர் பிஸ்கட் வாங்க வந்தவர் போல் நடித்து அந்த மூதாட்டி அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்து விட்டார்.
வழக்கம்போல் கடையில் சீதா உட்கார்ந்து இருந்தபோது ஒரு வாலிபர் அங்கு வந்தார். பின்னர் அவர் ஒரு பிஸ்கட் பாக்கெட் கேட்டார். அந்த மூதாட்டி பிஸ்கட்டை எடுக்க திரும்பிய போது அந்த வாலிபர் மூதாட்டியின் வாயை கையால் பொத்தி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்தார். அடுத்த நொடி அங்கு தயாராக நின்ற வாலிபரின் மோட்டார் சைக்கிளில் ஏறினார். பின்னர் இரு ஆசாமிகளும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீதா புலிவலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.