சுகாதார விழிப்புணர்வு முகாமில் 550 கால்நடைகளுக்கு தடுப்பூசி
- காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- முகாமை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
திருச்சி :
முசிறி அருகே காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முசிறி கோட்ட உதவி இயக்குனர் சையது முஸ்தபா அனைவரையும் வரவேற்றார்.
மண்டல இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா திட்ட விளக்க உரையாற்றினார். முகாமில் தீவன அபிவிருத்தி மற்றும் கால்நடை மேலாண்மை குறித்து கண்காட்சி நடத்தப்பட்டது.
சிறந்த கிடேரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு மேலாண்மை விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உலர் தீவன வைக்கோல் கட்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 550 கால்நடைகளுக்கு தடுப்பூசி , குடற்புழு நீக்கல் , செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சினை பரிசோதனை, மற்றும் தாது உப்பு கலவை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கால்நடை உதவி இயக்குனர்கள் டாக்டர்கள் பாரிவேல், சுகுமார், கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திக், குமரேசன், கோபி, முருகேசன், விவேகானந்தன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.