உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையன்

வேலூரில் வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற வாலிபர் தப்பி ஓட்டம்

Published On 2022-07-02 08:32 GMT   |   Update On 2022-07-02 08:36 GMT
  • பொதுமக்கள் விரட்டி சென்றனர்.
  • கண்காணிப்பு கேமராவில் பதிவு

வேலூர்:

வேலூர் சேண்பாக்கம் வேந்தன் தெருவில் வசித்து வருபவர் சசிகலா. நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இரவு 11.30 மணி அளவில் இவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் ஒருவர் வந்தார். வீட்டிற்கு வெளியே நின்று இருபுறமும் பார்த்துவிட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தார்.

சத்தம் கேட்டு கண்விழித்த சசிகலா குடும்பத்தினர் வாலிபர் வீட்டுக்குள் நுழைய முயன்றதை கண்டு அலறி கூச்சலிட்டனர். இதனால் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர் வெளியே குதித்து தப்பி ஓடினார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரும் அவரை விரட்டி சென்றனர். ஆனாலும் பிடிக்கமுடியவில்லை. இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர் .

அதில் வாலிபர் சசிகலாவின் வீட்டு சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகளும் தப்பி ஓடியது பதிவாகியுள்ளது. வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனை வைத்து போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.

சேண்பாக்கம் பகுதியில் இது போன்று தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News