அரசு பஸ் மீது மினி லாரி உரசியதால் நடுரோட்டில் டிரைவர்கள் வாக்குவாதம்
- போக்குவரத்து நெரிசல்
- போலீசார் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரின்சர்க்கிளில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது.
தினந்தோறும் இந்த நெரிசல் வாடிக்கையாகி விட்டபோதிலும் வாகன ஓட்டிகள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு கிரீன் சர்க்கிளை கடந்து வருகின்றனர்.இன்று காலை வேலூர் கிரின் சர்க்கிளில் சென்னையிலிருந்து வேலூருக்கு வந்த அரசு பஸ் ஒன்றை டிஜிட்டல் பேனர் கம்பிகள் ஏற்றி வந்த மினிலாரி முந்தி செல்ல முயன்றது. அப்போது பஸ் மீது பேனர் கம்பிகள் உரசின.
இதனால் பஸ் அங்கே நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்து அணிவகுத்து நின்றன. இதனால் அந்த வாகனங்கள் முன்னும் பின்னும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது
இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனத்தை சீர் செய்யாமல் 2 வாகன டிரைவர்களும் கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மேலும் நெரிசல் அதிகமானது. அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 2 டிரைவர் களையும் கடுமையாக எச்சரித்து பஸ் மற்றும் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போக்குவரத்து சீரானது.