தொகுப்பு வீடுகள்-சாத்தூர் எம்.எல்.ஏ. நிதி உதவி
- தொகுப்பு வீடுகள் பராமரிப்பு சாத்தூர் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.
- தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கோபாலபுரம், குறிச்சியார்பட்டி பகுதிகள் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்தப்பகுதியில் சுமார் 35 தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதாக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கு அந்தப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் ஆய்வு செய்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், குறிச்சியார்பட்டி பஞ்சாயத்தில் 4 வீடுகளுக்கும், கோபாலபுரம் பஞ்சாயத்தில் 21 வீடுகளுக்கும் சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
மேலும் பழுதடைந்த வீடுகளை பார்வையிட்டு வீடுகளை சரி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், கோபாலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுதா ஜெயக்குமார், குறிச்சியார்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துராஜ், ஒன்றிய பணி குழு மேற்பார்வளர்கள் கண்ணன், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.