பள்ளி மாணவர்களுக்கான கலைத்திறனை மேம்படுத்தும் பயிற்சி
- பள்ளி மாணவர்களுக்கான கலைத்திறனை மேம்படுத்தும் பயிற்சி சிவகாசியில் நாளை தொடங்குகிறது.
- சான்றிதழ்கள் வழங்கப்படும்.
சிவகாசி
5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி கல்வி பயிலும் மாணவர்களுக்கான கலை பயிற்சிகள் வழங்குதல், அவர்களின் கலைத்திறனை மேம்படுத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டு தமிழ்நாடு முழுவதும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
நெல்லை மண்டலத்தில் இருந்து செயல்படும் விருதுநகர் மாவட்ட ஜவகர் மன்றத்தில் பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பம் ஆகிய கலையில் 5 வயது முதல் 16 வயது வரை உள்ள மாணவர்களுக்கு வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிவகாசியில் அமைந்துள்ள அண்ணாமலை-உண்ணாமலை அம்மாள் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் வகையில் நாளை 3-ந்தேதி முதல் 22-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பரதநாட்டியம், சிலம்பம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை மாணவ-மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நெல்லை மண்டல உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.