தஞ்சையில் ரெயில் என்ஜின் மோதி பெண் பலி
- 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடல்கள் சிதைவுற்று பிணமாக கிடந்தார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை- பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி உடல்கள் சிதைவுற்று பிணமாக கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இசையரசன், சுரேஷ், ஏட்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அதில் தஞ்சையில் இருந்து நாகைக்கு சென்ற ரெயில் என்ஜின் மோதி அந்தப் பெண் பலியானது தெரிய வந்தது. இருப்பினும் அவர் யார் ? எந்த ஊர் ? என்ற விவரம் தெரியவில்லை.இதையடுத்து அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் என்ஜின் மோதி அந்த பெண் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.