கடலூர் தாசில்தார் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
- நேற்று முதல் விண்ணப்பித்தவர்கள் ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்க வேண்டி மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.
- பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளுக்கு பணம் சென்று உள்ளதும் தெரியவந்துள்ளது
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் வேண்டி விண்ணப்பித்த ஏராளமான பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டன. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்த பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர்அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உதவி மையம் தொடங்கப்பட்டு, அங்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்ததை தொடர்ந்து நேற்று முதல் விண்ணப்பித்தவர்கள் ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்க வேண்டி மீண்டும் விண்ணப்பித்து வந்தனர்.
இன்று காலை கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்து சென்றனர். இந்த நிலையில் ஏராளமான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் பணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டன. ஆனால் விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட வங்கி கணக்கில் பணம் செல்லாமல் அவர்கள் ஏற்கனவே தொடங்கி இருந்து பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளுக்கு பணம் சென்று உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதற்கான நிரந்தர தீர்வை ஏற்படுத்தி உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.