உள்ளூர் செய்திகள்

மருதமலை கோவிலில் பால்குடம், காவடி எடுத்து வழிபாடு

Published On 2022-06-12 09:08 GMT   |   Update On 2022-06-12 09:08 GMT
  • பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்
  • வைகாசி விசாக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை:

கோவை மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை நடந்தது. 6.30 மணிக்கு மூலவருக்கு பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வைரநகைகள் பொறிக்கப்பட்ட தங்க கவச உடை அணிந்த சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினார்கள். பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கொண்டுவரும் பால்குடங்கள் சுப்பிரமணியசாமிக்கு ம், வள்ளி தெய்வானைக்கும் மூலவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் கோவில் அலங்கார முன் மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தங்க மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். கோவில் முன் மண்டபத்தில் பக்தர்கள் காவடி ஆட்டம் நடைப்பெற்றது.‌ தொடர்ந்து மாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேக தீபாராதனை நடைபெறுகிறது. 6 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் திருவீதி உலா நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

விழாவை தொடர்ந்து வடவள்ளி போலீசார் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக அடிவாரம் பகுதியில் பார்க்கீங் வசதி செய்து கொடுத்தனர். மலைக் கோவிலுக்கு செல்ல 50 வாகனங்கள் என ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அனுப்பி வைத்தனர். அதிகப்படியான பக்தர்கள் கோவில் பஸ்சில் செல்ல காத்து இருந்ததால் நீண்ட வரிசையில் காத்து இருந்து மலைக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News