உள்ளூர் செய்திகள்

மாதவரத்தில் வடமாநில கட்டிட தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர்

Published On 2023-01-07 10:35 GMT   |   Update On 2023-01-07 10:35 GMT
  • துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
  • கார்பெண்டர் வேலை செய்யும் லாரன்ஸ் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஏர்கன் துப்பாக்கியால் பறவைகளை சுடும்போது குறி தவறி கட்டிட வேலை செய்பவர் கையில் பட்டதும் தெரியவந்தது.

கொளத்தூர்:

சென்னை மாதவரம் பால் பண்ணை, பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் சென்டஸ்க் (வயது 31). வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று மாலை கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது இவரது வலது கையில் திடீரென ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அருகில் இருந்த ஊழியர்களிடம் இதுகுறித்து தெரிவித்ததை தொடர்ந்து அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது வலது கையில் குண்டு பாய்ந்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சங்கர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அதே பகுதியில் 60 அடி தூரத்தில் உள்ள கட்டிடத்தின் மாடியில் இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது. அவரையும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் கார்பெண்டர் வேலை செய்யும் லாரன்ஸ் (வயது 32) என்பதும் தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஏர்கன் துப்பாக்கியால் பறவைகளை சுடும்போது குறி தவறி கட்டிட வேலை செய்பவர் கையில் பட்டதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சென்டஸ்க் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News