பா.ஜனதா நோட்டாவுடன் போட்டி போடுகிறது- கி.வீரமணி பேச்சு
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி அலை ஓய்ந்து விட்டது. அவரால் இனி ஆட்சிக்கு வரமுடியாது. பசு மாட்டுக்கு கொடுக்கும் பாதுகாப்பு நமக்கு இல்லை. திராவிடர் கழகம் இந்தியாவை பற்றி கவலைப்படும் கழகம். நாங்கள் பதவி கேட்கவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். மூடிய பள்ளிகளை திறந்தவர் காமராஜர். அதேபோல் கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் மருத்துவக்கல்லூரிகளை மாவட்டம் தோறும் உருவாக்கினார். ஆனால் தற்போது அந்த கல்லூரிகளில் நம் பிள்ளைகளுக்கு இடம் இல்லை.
2014-ம் ஆண்டு வேலை கிடைக்கும் என்ற உறுதியில் பா.ஜனதாவுக்கு இளைஞர்கள் வாக்களித்தனர். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பா.ஜனதா வெற்றி பெற்ற பின் ரூ.15 லட்சம் தருவதாக மோடி கூறினார். ஆனால் யாருக்கும் கொடுக்கவில்லை. தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்து விட்டார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
பா.ஜனதா கட்சி நோட்டாவுடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார். #kveeramani #bjp #parliamentelection