இந்தியா (National)

நிலச்சரிவில் இருந்து 5,500க்கும் மேற்பட்டோர் மீட்பு: முதல் மந்திரி பினராயி விஜயன்

Published On 2024-07-31 12:06 GMT   |   Update On 2024-07-31 12:06 GMT
  • வயநாட்டில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
  • இந்தப் பகுதிகள் சேறும், சகதியுமாகவும், இடிபாடுகள் நிறைந்தும் காணப்படுகிறது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

வயநாட்டில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்த பகுதிகள் முற்றிலும் சேறும், சகதியுமாகவும், இடிபாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று செய்தியாளளைச் சந்தித்தார். அப்போது வயநாடு நிலச்சரிவு பாதிப்பு குறித்து அவர் கூறியதாவது:

கேரளாவில் முழு வீச்சில் மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.


கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.

நிலச்சரிவில் சிக்கி 5,500-க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி 191 பேர் மாயமாகி உள்ளனர். மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள் மற்றும் 64 பெண்களும் உள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

வயநாட்டில் உள்ள 82 நிவாரண முகாம்களில் 19 கர்ப்பிணி பெண்கள் உட்பட 8,017 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் 572 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட 30-ம் தேதி மாலைதான் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

வயநாடு நிலச்சரிவு பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக கேரள மாநில அமைச்சர்களின் ஒரு மாத சம்பளம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.

வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News