தெலுங்கானாவில் அனல் கக்கும் வெயில்: சந்திரசேகரராவின் பஸ் யாத்திரை ஒத்திவைப்பு
நகரி:
ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதமே கோடை வெயில் உச்சத்தை தொட்டு உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் 105 டிகரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.
இந்த வெயில் கொடுமைக்கு இதுவரை 100–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். ஆந்திராவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 34 பேர் பலியானதாக தகவல் வந்து உள்ளது. இதில் நெல்லூரில் மட்டும் 10 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் வெயிலுடன் அனல் காற்றும் வீசுகிறது. பல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பகலில் வீசும் அனல் காற்றினால் மக்கள் வெளியே வர தயங்குகிறார்கள்.
வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலைமையை நேரில் பார்க்கவும், மக்களை சந்தித்து குறைகளை கேட்கவும் முதல்–மந்திரி சந்திரசேகரராவ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இதற்காக பஸ் யாத்திரைக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
ஆனால் வெயில் காரணமாக தனது பஸ் யாத்திரையை ஒத்திவைக்க அவர் திட்டமிட்டு உள்ளார். பஸ் யாத்திரைக்கு ஏற்ற நேரம் இதுவல்ல என்று அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
மாநிலத்தில் உள்ள 67 நகராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது. கிராமங்களில் உள்ள விவசாயிகள் பிழைப்புக்கு வழி இல்லாமல் தங்களது கால்நடைகளை விற்று விட்டு இடம் பெயர தொடங்கி உள்ளனர்.
இப்போதே இந்த நிலைமை என்றால் அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும் என்று பொது மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.