செய்திகள் (Tamil News)
வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை
வாட்ஸ்அப் போன்ற சமூகவலைதளங்களை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். #WhatsApp #RaviShankarPrasad
புதுடெல்லி :
நாடுமுழுதும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் பரவலாக வதந்திகள் பரவிவருகிறது, தமிழகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குழந்தை கடத்தல் பற்றி பரவிய வதந்தியை உண்மை என நம்பி பொதுமக்கள் கும்பலாக சேர்ந்து தாக்குதல் நடத்தியதில் அப்பாவிகள் சிலர் உயிரிழந்தனர்.
அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு எதிராகவும் இவ்வாறான வதந்திகள் பரப்பப்பட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற வழிவகுக்கிறது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் குறிபிட்டுள்ளதாவது :-
வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதனபடி, ஒரே நேரத்தில் பார்வேர்டு செய்திகளை 5 பேருக்கு மட்டுமே அனுப்ப வாட்ஸ்அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், அனுப்பப்படும் செய்தி பார்வேர்டு செய்தி தானா ? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
யாரேனும், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களை தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #WhatsApp #RaviShankarPrasad