செய்திகள்

மோடி மீண்டும் பிரதமரானால், ஜனநாயகம் அழிந்துவிடும்: சித்தராமையா

Published On 2019-04-20 02:06 GMT   |   Update On 2019-04-20 02:06 GMT
மோடி மீண்டும் பிரதமரானால் ஜனநாயகம் அழிந்துவிடும் என்று சித்தராமையா கடுமையாக தாக்கி பேசியுள்ளார். #Siddaramaiah #LokSabhaElections2019
பெங்களூரு :

கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மண்டியா, துமகூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. 2-வது கட்ட தேர்தல் தார்வார், பல்லாரி உள்பட மீதமுள்ள 14 தொகுதிகளில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி கர்நாடக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வட கர்நாடகத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் பல்லாரியில் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு பேசியதாவது:-

மோடி மீண்டும் பிரதமரானால் என்ன கதி என்ற ஆதங்கம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. மோடி மீண்டும் பிரதமரானால் ஜனநாயகம் அழிந்துவிடும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும். அரசியலமைப்பு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படும். இந்த தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கவில்லை.

ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த 8 பேருக்கு டிக்கெட் கொடுத்துள்ளோம். பா.ஜனதா வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 10-க்கு மேல் தாண்டக்கூடாது. காங்கிரஸ் கூட்டணி குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.



நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியின மக்கள் நிம்மதியாக வாழவில்லை. பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள். நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மோடியை போல் பொய் பேசும் பிரதமரை நான் பார்த்தது இல்லை.

நாட்டின் வளர்ச்சியில் மோடியின் பங்கு என்ன?. பல்லாரியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவேந்திரப்பா, காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பா.ஜனதாவுக்கு வேட்பாளர்கள் இல்லாததால், தேவேந்திரப்பாவை அக்கட்சியினர் அழைத்து சென்றுவிட்டனர். அவரிடம் அதிக பணம் உள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, அவர் என்னிடம் வந்து டிக்கெட் கேட்டார். டிக்கெட் இல்லை என்று கூறி அனுப்பிவிட்டேன். அதனால் அவர் பா.ஜனதாவுக்கு சென்றுவிட்டார். நான் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தேன். மோடியும் 5 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார்.

நான் 5 ஆண்டுகள் எத்தனை பணிகளை செய்துள்ளேன். அதற்கு விவரங்களை வழங்க தயாராக உள்ளேன். மோடி தனது பணிகள் குறித்து விவரங்களை வழங்க தயாரா?. மோடி நாட்டில் எங்காவது இலவசமாக உணவு வழங்கி இருக்கிறாரா?. விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு பிரதமரிடம் நான் கேட்டேன். அவர் அதை கண்டுகொள்ளவில்லை.

விவசாய கடன் தள்ளுபடி செய்ய என்னிடம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எந்திரம் இல்லை என்று சொன்னவர் எடியூரப்பா. அவர் தனது தோளில் பச்சை துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

இவ்வாறு சித்தராமையா பேசினார். #Siddaramaiah #LokSabhaElections2019
Tags:    

Similar News