செய்திகள்

மோடியை விமர்சித்த விவகாரம்- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டார்

Published On 2019-04-30 10:11 GMT   |   Update On 2019-04-30 10:14 GMT
பிரதமர் மோடியை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். #MeenakshiLekhi #RahulGandhi #ContemptNotice #Rafale
புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார்.

இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ராகுல் காந்திக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி ராகுல் காந்தி நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனாட்சி லேகி தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ராகுல் காந்தி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருப்பது வெறும் கண்துடைப்புதான் என்றும், அவரது பதில் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என கண்டித்தனர்.

இதையடுத்து, பிரதமரை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறியதாக பேசியதற்கு, மன்னிப்பு கேட்பதாக ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் கூறினார். மே 6-ம் தேதி ராகுல் காந்தி புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வார் என அவரது வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #MeenakshiLekhi  #RahulGandhi #ContemptNotice #Rafale
Tags:    

Similar News