செய்திகள் (Tamil News)
மக்களவை, சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் விவரம்
மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை, சட்டசபை இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
மேற்கு வங்காளம், அசாம், இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 14 மாநிலங்களில் காலியாக இருந்த 3 மக்களவை, 29 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 30-ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிந்தது.
மேற்கு வங்காளத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. நான்கு தொகுதிகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இமாச்சல பிரதேசத்தில் 3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இது பா.ஜனதாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
அசாம் மாநிலத்தில் பா.ஜனதா 3 இடங்களில் வெற்றி பெற்றது. யூ.பி.பி.-எல் கட்சி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன.
மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா இரண்டு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. கர்நாடகாவில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.
ஆந்திராவில் நடைபெற்ற ஒரு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
பீகாரில் நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், இரண்டு இடங்களையும் ஐக்கிய ஜனதா தளம் கைப்பற்றியது.
ஹரியானாவில் ஒரு இடத்தை காங்கிரசும், மேகாலயாவில் ஒரு இடத்தை என்.பி.பி.யும், மற்றொரு இடத்தை யு.டி.பி. கட்சியும் பிடித்தன.
தெலுங்கானாவில் ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவை இடைத்தேர்தலில் சிவசேனா கட்சி வெற்றி பெற்றது. இமாச்சல பிரதேசம் மந்தி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. மத்திய பிரதேசம் கந்த்வா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றது.