இந்தியா (National)
மந்திரி பதவியில் இருந்து ஈசுவரப்பாவை நீக்கும் வரை போராட்டம் தொடரும் - டி.கே.சிவகுமார்
ஹிஜாப் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருப்பது சரியில்லை என காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு:
பெங்களூரு விதானசவுதாவில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் இம்மாதம் 27-ம் தேதி முதல் மீண்டும் பாதயாத்திரை தொடங்கப்பட உள்ளது. இந்த பாதயாத்திரை பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, குடிநீருக்காக நடத்தப்படுவது ஆகும்.
தேசியக்கொடியை அவமதித்த ஈசுவரப்பாவிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இதற்காக விதானசவுதாவில் இரவு, பகலாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும், ஈசுவரப்பாவிடம் மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி கூறவில்லை. அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றுதான் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. அவரிடம் இருந்து மந்திரி பதவியை பறிக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும். சட்டசபை கூட்டத்தொடரையும் நடத்த விடமாட்டோம் என தெரிவித்தார்.