இந்தியா (National)
கவர்னர் ஆரிப் முகம்மது கான்

கவர்னர் மாளிகையை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு இல்லை- கேரள கவர்னர் பேட்டி

Published On 2022-02-20 10:35 GMT   |   Update On 2022-02-20 11:29 GMT
கவர்னரின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு ஆரிப் முகமது கான் கவர்னராக உள்ளார். சமீபத்தில் கேரளாவில் உள்ள பல்கலை கழக துணை வேந்தர் நியமனத்தில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இந்த நிலையில் கவர்னருக்கு சமீபத்தில் தனி உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். தற்போது இந்த விவகாரமும் சர்ச்சையானது.

இதனை கேரள எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சியும் விமர்சித்தது. இதுபோல ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் கவர்னரின் செயல்பாட்டை விமர்சித்தார்.

கவர்னரின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கவர்னர் ஆரிப் முகமது கான் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரளாவில் உள்ள மந்திரிகளில் பலருக்கு 20-க்கும் மேற்பட்ட உதவியாளர்கள் உள்ளனர்.2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊழியர்கள் மாற்றப்படுகிறார்கள். அவர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் என அரசின் பணம் வழங்கப்படுகிறது. இது அரசிற்கு நிதி சுமையை ஏற்படுத்துகிறது.

மாநில மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு மாநில அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். கவர்னர் மாளிகையை யாரும் கட்டுப்படுத்த வேண்டாம். அரசுக்கும் இதற்கு உரிமை இல்லை. நான் ஜனாதிபதிக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்ககோரி கமல் கட்சியினர் போராட்டம்

Similar News