இந்தியா (National)
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் புதிதாக 1,335 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-04-01 04:13 GMT   |   Update On 2022-04-01 04:38 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 52 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,335 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 28-ந்தேதி பாதிப்பு 1,270 ஆக இருந்தது. மறுநாள் 1,259, 30-ந்தேதி 1,233, நேற்று 1,225 ஆக குறைந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 30 லட்சத்து 25 ஆயிரத்து 775 ஆக உயர்ந்தது.

கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 48 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 52 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்தபலி எண்ணிக்கை 5,21,181 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,918 பேர் நலம் பெற்றுனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 90 ஆயிரத்து 922 ஆக உயர்ந்தது.

தற்போது 13,672 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தை விட 635 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 23,57,917 டோஸ்களும், இதுவரை 184 கோடியே 31 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 78.97 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் நேற்று 6,06,036 மாதிரிகள் அடங்கும்.

Similar News