இந்தியா (National)

'ஹிஸ்புல்லா தலைவர் உயிர்தியாகம்'.. காஷ்மீரில் பேரணி- மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது? - பாஜக கேள்வி

Published On 2024-09-29 06:15 GMT   |   Update On 2024-09-29 06:57 GMT
  • காஷ்மீர் மக்கள் சாலைகளில் திரண்டு கறுப்புக்கொடி ஏந்தி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர்.
  • பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எதிரிகளுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் புனிதப் போர் தொடரட்டும் என்று தனது அறிக்கையில் மெகபூபா தெரிவித்துள்ளார்.

நஸ்ரல்லா கொலை 

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு ஈரான், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நஸ்ரல்லாவின் மரணத்தை அடுத்து ஜம்மு காஷ்மீரில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

காஷ்மீர் போராட்டம் 

ஸ்ரீநகரில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் பெண்கள் உட்பட அதிக அளவிலான மக்கள் சாலைகளில் திரண்டு கறுப்புக்கொடி ஏந்தி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மக்கள் ஜனநாயக கட்சியின்[பிடிபி] தலைவரும் முன்னாள் காஷ்மீர் முதல்வருமான மெகபூபா முப்தி ஹசன் நஸ்ரல்லா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். நஸ்ரல்லா மற்றைய உயிர் தியாகிகளோடு இணைந்துள்ளார் என்றும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எதிரிகளுக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் புனிதப் போர் தொடரட்டும் என்று தனது அறிக்கையில் மெகபூபா தெரிவித்துள்ளார்.

உயிர் தியாகி 

மேலும் ஹசன் நஸ்ரல்லாவின் உயிர்த் தியாகத்துக்கு துக்கம் அனுசரிக்கும் வகையிலும் பாலஸ்தீனம், லெபனான் மக்களோடு இந்த தருணத்தில் ஒன்றாக நிற்கும் விதமாக இன்றைய தினம் நடக்க இருந்த தனது சட்டமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

ஏன் வலிக்கிறது? 

இந்நிலையில் மெகபூபாவின் இந்த நடவடிக்கையை பாஜக விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் கவீந்தர் குப்தா, ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது, வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டபோது அவர் வாய்மூடி இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

Similar News