இந்தியா

கடந்த 10 நாட்களில் 4 பாலங்கள் இடிந்து விழுந்ததால் பீகாரில் பரபரப்பு

Published On 2024-06-27 13:58 GMT   |   Update On 2024-06-27 13:58 GMT
  • தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
  • புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் நகரில் 13 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பல கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்துள்ளது.

இது பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் இடிந்து விழுந்த 4 ஆவது பாலமாகும். பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News