இந்தியா

வயநாட்டில் அடையாளம் தெரியாத சிறுமி உடலுக்கு உரிமை கொண்டாடிய 4 குடும்பத்தினர்

Published On 2024-08-02 05:27 GMT   |   Update On 2024-08-02 05:27 GMT
  • உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
  • டி.என்.ஏ. பரிசோதனைக்கு பரிந்துரை.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை தொடர்ந்து பெய்ததால் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை ஆகிய 3 இடங்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் தூங்கிக் கொண் டிருந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவத்தில் பலியான 300-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மாயமான 100-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கடற்படை, கப்பல்படை, விமானப்படை என ராணு வத்தின் முப்படை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் இரவு பகல் பராமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலியானவர்களின் உடல்கள் அரசு ஆஸ்பத்திரி கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினர் அடையாளம் காட்டுவதன் அடிப்படையில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

நிலச்சரிவில் பெரிய பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததாலும், காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற தாலும் பலியானவர்களின் உடல்கள் சிதைந்த நிலையி லேயே மீட்கப்பட்டு வரு கின்றன. பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சின்னா பின்னமாகி இருக்கின்றன. இதனால் இறந்தவர்களை அடையாளம் காணுவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

இதன் காரணமாக ஒரு உடலுக்கு பலர் உரிமை கொண்டாடும் அரங்கமும் அரங்கேறி வருகிறது. முண்டக்கை நிலச்சரிவில் சிக்கி பலியான ஒரு சிறுமி உடலுக்கு 4 குடும்பத்தினர் உரிமை கொண்டாடி உள்ளனர். அந்த சிறுமியின் உடல் மேப்பாடி மருத்துவ மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. சிறுமியின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்துள்ளது.

முதலில் ஒரு குடும்பத்தினர் அந்த சிறுமி தங்களது குழந்தை என கூறி இருக்கின்றனர். அவர்களிடம் அந்த சிறுமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலுக்கு உரிமை கொண்டாடினர்.

இருவரது குடும்பத்தின ரையும் அதிகாரிகள் சமரசம் செய்து கொண்டிருந்தபோது, மேலும் இரு குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலுக்கு உரிமை கொண்டாடினர். இதனால் மேலும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் உரிமை கொண்டாடிய குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கே கொண்டு சென்று விட்டனர்.

பின்பு அவர்களிடமிருந்து மீட்டு 2-வது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதுதான் மேலும் 2 குடும்பத்தினரும் சிறுமியின் உடலுக்கு உரிமை கொண்டாடினர்.


இந்நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில் சிறுமியின் உடலுக்கு 4 குடும்பத்தினர் உரிமை கொண்டாடுவது குறித்து பினராயி விஜயனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக சிறுமிக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டிய அவசியத்தை அவரிடம் அதிகாரிகள் எடுத்து கூறினர்.

அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பினராயி விஜயன் பரிந்துரைத்தார். இதேபோன்று பல அடையாளம் தெரியாத உடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உரிமை கொண்டாடுவதால் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அதனை தீர்க்க ஒரு அமைப்பை கொண்டு வர அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News