காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: கொல்லப்பட்டவர்களில் ஒருவன் முக்கிய பயங்கரவாதி
- பரிகம் கிராமத்தில் ஒரு இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
- பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
ஜம்மு:
காஷ்மீர் மாநிலம் புல்வா மா மாவட்டத்தில் அடர்ந்த வனபகுதி ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் லாரோவ்-பரிகம் சாலையில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது பரிகம் கிராமத்தில் ஒரு இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பாதுகாப்பு படையினர் சரண் அடைய எச்சரித்தனர்.
ஆனால் தீவிரவாதிகள் அதை ஏற்க மறுத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இன்று காலை துப்பாக்கி சண்டை ஓய்ந்தது. அதன் பிறகு பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது தெரிந்தது. அவர் கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவன் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தளபதி என்று தெரியவந்தது. இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.