வயநாடு தொகுதி மக்களை அவமதித்த ராகுல் காந்தி: பா.ஜ.க. தாக்கு
- பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார்.
- ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பி.யாக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். தற்போது இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதனால் இரு தொகுதியில் எந்தத் தொகுதியை விட்டுக்கொடுப்பார் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையே, ராகுல் காந்தி வயநாடு தொகுதியை விட்டுக்கொடுக்கிறார். ரேபரேலி தொகுதி எம்.பி.யாக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று அறிவித்தார்.
இந்நிலையில், வயநாடு தொகுதி மக்களை ராகுல் காந்தி அவமதித்துள்ளார் என பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
பிரியங்கா காந்திக்கு நாட்டில் எங்கிருந்தும் போட்டியிட உரிமை உண்டு. ஆனால் காங்கிரசின் இந்த முடிவால் பல கேள்விகள் எழுகின்றன.
குறிப்பாக, ராகுல் காந்தி ரேபரேலியிலும் போட்டியிடப் போவதை வயநாடு மக்களிடம் மறைத்துவிட்டார்.
இவர்களை ஏமாற்றிவிட்டு, இன்று அவர்கள் நல்லெண்ணத்தில் அவருக்கு ஆதரவளித்து இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளனர்.
அவர்களுக்காக ஏதாவது செய்ய ரேபரேலி செல்கிறேன் என கைகழுவிக் கொண்டிருக்கிறார்...இது வயநாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம்.
பிரியங்காவின் அரசியல் அறிமுகத்தை ஐ.யு.எம்.எல். ஆதரிப்பதால் அவருக்கு வெற்றி பெறுவது மிக எளிதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.