வயநாட்டிற்கு பிரியங்காவை விட சிறந்த பிரதிநிதியை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது: ராகுல் காந்தி
- வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
- காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ரேபரேலி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்தும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி எம்.பி.யை ராஜினாமா செய்தார்.
இதனால் நவம்பர் 13-ந்தேதி வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில் வயநாட்டிற்கு பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பார்க்க முடியாது ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் "வயநாட்டு மக்களுக்கு என் இதயத்தில் சிறந்த இடம் வைத்துள்ளேன். என்னுடைய சகோதரியை விட அவர்களுக்கு சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
அவர் நாடாளுமன்றத்தில் வயநாட்டின் சக்திவாய்ந்த குரலாகவும் இருப்பார் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.