இந்தியா (National)

ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக சென்ற சந்திரயான் 3.. அடுத்து வருவதுதான் முக்கியமான கட்டம்

Published On 2023-07-25 10:10 GMT   |   Update On 2023-07-25 10:10 GMT
  • சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும்.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது.

ஏற்கனவே 4 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்ட நிலையில், 5வது கட்டமாக இன்று சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலம் 127609 கிமீ x 236 கிமீ என்ற நீள்வட்டப்பாதையில் சுற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. துல்லியமாக கணித்த பிறகு அடையப்பட்ட சுற்றுப்பாதையை இஸ்ரோ உறுதி செய்யும்.

அடுத்து முக்கியமான நிகழ்வாக, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் விண்கலம் உந்தி தள்ளப்படும். இந்த செயல்முறை ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவில் 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வரும். பின்னர் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். பின்னர் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும். 

Tags:    

Similar News