மல்லிகார்ஜூன கார்கேவை கொல்ல பா.ஜனதா சதி- காங்கிரஸ் குற்றச்சாட்டு
- 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும் அவரது குடும்பத்தையும் கொல்ல பா.ஜனதா சதி செய்கிறது.
பெங்களூரு:
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் மல்லிகார்ஜூன கார்கேவையும் அவரது குடும்பத்தினரையும் கொல்ல பா.ஜனதா சதி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கர்நாடக பொறுப்பாளரும், செய்தி தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா இது தொடர்பாக பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும் அவரது குடும்பத்தையும் கொல்ல பா.ஜனதா சதி செய்கிறது. கார்கேவை கொல்ல பா.ஜனதா சதி செய்தது சித்தாவூர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஆடியோவில் அம்பலமாகி உள்ளது.
கார்கே தலித் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் பா.ஜனதாவால் ஜீரணிக்க முடியவில்லை. மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் மோடி கேலி செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.