இந்தியா

10 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: சாகும் வரை சிறை தண்டனை

Published On 2024-09-05 05:21 GMT   |   Update On 2024-09-05 05:21 GMT
  • குழந்தைகள் நலக் குழுவினரும் மாணவியிடம் விசாரணை.
  • ரூ1.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 2023-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத் தன்று தேர்வு நடந்தபோது அவரது செயல்பாட்டை கண்டு சந்தேகமடைந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர், மாணவியை தனியாக அறைக்கு அழைத்துச்சென்று பேசினார்.

அப்போது கூலித்தொழிலாளியான தனது தந்தையால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வருவதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை, அதுபற்றி குழந்தைகள் நலக்குழுவுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் குழந்தைகள் நலக் குழுவினரும் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாதிக்கப் பட்ட மாணவிக்கு ஒன்றரை வயது இருக்கும் போது அவளது தாய் இறந்து விட்டார். அதன்பிறகு மாணவியின் தந்தை வேறொரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுடன் மாணவி தங்கியிருந்தார்.

மாணவிக்கு 5 வயதான நிலையில் 1-ம் வகுப்பு படித்தார். அப்போதில் இருந்துதான் மாணவிக்கு அவளது தந்தை பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். 10 ஆண்டுகளாக மாணவிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்தபடி இருந்தி ருக்கிறார்.


தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மாணவி கூறியதன் அடிப் படையில், அவளது தந்தை மீது அருவிக்கரை போலீசார் வழக்கு பதிந்தனர். அந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ கோர்ட்டில் நடந்துவந்தது. வழக்கில் சேர்க்கப்பட்ட 26 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது.

தற்போது அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சாகும்வரை கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஷிபு உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ1.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News