இந்தியா

ஐதராபாத்தில் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மீன் பிரசாதம் வழங்கும் ஹரிநாத் கவுட் மரணம்

Published On 2023-08-25 06:18 GMT   |   Update On 2023-08-25 06:18 GMT
  • பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 170 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள்.
  • ஹரிநாத் கவுட்டின் இறுதிச் சடங்குகள் இன்று காவடிகுடாவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி:

ஐதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.

அப்போது ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருள்ள மீன் வாயில் மருந்தை வைத்து அதை அப்படியே பாதிக்கப்பட்டவரின் தொண்டையில் வைத்து விழுங்க வைப்பார்கள்.

இலவசமாக வழங்கப்படும் இந்த மீன் மருந்தை பெற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆஸ்துமா நோயாளிகள் அங்கே கூடி வருகின்றனர்.

இதை பாத்தினி ஹரிநாத் கவுட் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 170 ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள்.

ஆஸ்துமா நோயாளிகளுக்கு இலவசமாக மீன் பிரசாதம் வழங்கும் பாத்தினி சகோதரர்களில் முக்கியமானவர் பாத்தினி ஹரிநாத் கவுட் (வயது 84).

இவர் நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள காவடிகுடாவில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று இரவு அவர் காலமானார்.

இவரது மனைவி சுமித்ரா தேவி, மகன்கள் அனில், அஜய் மற்றும் அல்கானந்தா மற்றும் அர்ச்சனா என்ற மகள்கள் உள்ளனர்.

ஹரிநாத் கவுட்டின் இறுதிச் சடங்குகள் இன்று காவடிகுடாவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மீன் மருந்து தயாரித்து வழங்குவதில் பாத்தினி ஹரிநாத் மூளையாகவும் செயல்பட்டு வந்தவர். அவரது இறப்பு பாத்தினி குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News